சந்திரன் :
சந்திரன் நவகிரகங்களுள் இரண்டாம் இடத்தை வகிக்கும் கிரகம் ஆகும். நவ கிரகங்களில் சூரியன் தந்தை என்றால் சந்திரன் தாய் ஆகும். தந்தையின் கோபத்தைத் தனித்து ஒரு தாய் எப்படி தன் குழந்தைகளை அவர் கோபத்தில் இருந்து காக்கிறாளோ அது போல சூரியனின் வெப்பத்தை ஈர்த்து அதனைக் குளுமையாக்கி நமக்கு அளிப்பது சந்திரன் ஆகும். எனவே தான் சந்திரனை தாய் என்று கூறுகிறோம். திங்கள் மதி, சோமன்,என சந்திரனுக்கு வேறு பெயர்கள் உண்டு.
சந்திரனுக்கு வளர்பிறை, தேய்பிறை என இரண்டு காலங்கள் உண்டு. அதற்குப் பின்னணியில் ஒரு புராதன கதையும் உண்டு என்பதை நம்மில் பலரும் அறிவோம். ஒரு முறை தட்சன் தனது 27 மகள்களையும் சந்திரனுக்கு மணமுடித்து வைத்தான். தனது 27 மனைவிகளிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதற்குப் பதிலாக ரோகிணியிடம் மட்டும் தனி பிரியம் காட்டினான் சந்திரன். இதனால் மனமுடைந்த மற்ற 26 மனைவிகளும் தந்தை தட்சனிடம் முறையிட்டனர். தட்சன் சந்திரனிடம் அனைவரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்த வேண்டினார். சந்திரன் அதை ஏற்கவில்லை. இதனால் கோபமுற்ற தட்சன் சந்திரனின் அழகு குறையவும், அவனது கலைகள் மங்கும்படியும் சாபம் இட்டான். இந்த சாபம் முற்றிலும் நீக்க முடியாத நிலையில் தான் சந்திரனின் கலை மங்கி மீண்டும் வளரும், மாதத்தில் ஒரு நாள் முழு பொலிவுடன் காட்சி அளிக்க இயலும் என்ற வகையில் சிவபெருமான் மூலாம் சாப விமோசனம் பெற்றது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.
சந்திர தோஷம் என்றால் என்ன?
தோஷம் என்றால் குறை என்று பொருள். குறை இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். சந்திரனுக்கு இரண்டு கலைகள் உண்டு. ஒன்று வளர்பிறை. மற்றொன்று தேய்பிறை. வளர்பிறை சந்திரன் முழு ஆற்றல் மிக்கதாகவும் சுபமாகவும் கருதப்படுகிறது. தேய்பிறை சந்திரன் அசுபராகவும் தோஷங்களுக்கு காரணமாகவும் அமைகிறது. சந்திரன் மனதைக் குறிக்கும். மனம், புத்தி, சிந்தனை சீராக இயங்க, எந்தவொரு விஷயத்திலும் தெளிவான முடிவுகளை எடுக்க சந்திரன் பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். சந்திரன் பலம் குறையும் போது மனநிலை பாதிக்கப்படுகிறது. தெளிவான முடிவுகளை எடுக்க இயலாத நிலை ஏற்படுகிறது. மேலும். மனநிலை பாதிக்கப்பட்டு சித்த சுவாதீனம் ஏற்படுகிறது. சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பட்ட நிலை ஏற்படுகிறது. மனதில் ஏற்படும். பாசம், காதல், கலை, கனிவு, சுகம், துக்கம் என பல்வகை உணுனர்வுகள் ஒருவருக்கு போராட்டமாக அமைய சந்திரனின் தோஷமே காரணமாக அமைகிறது. உணவை வீணாக்குவது, உணர்வுகளை அவமதிப்பது, பால் பொருட்களை வீணாக்குவது, நீர் நிலைகளை அசுத்தப்படுத்துவது போன்றவற்றின் காரணமாகவும் சந்திர தோஷம் ஏற்படுகிறது.
சந்திர தோஷ தலம் – கைலாசநாதர் திருக்கோவில்
தமிழ் நாட்டில் நவக்கிரக தலங்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் சந்திரனுக்கென்று தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்களூரில் அமைந்துள்ளது அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். இந்தக் கோவில் சந்திர தோஷம் நீங்கும் தலமாகவும், மேலும் சந்திரன் உணவுக்கு காரகம் வகிப்பவர் என்பதால் இந்த ஆலயம் அன்னப்பிரசானத்துக்கு மிகச்சிறந்த தலமாகவும் விளங்குகிறது.
தட்சனிடம் பெற்ற சாபம் நீங்க திங்களூர் திருத்தலத்தில் நீண்ட காலம் சிவபெருமானை வேண்டி தவம் செய்தான் சந்திரன். தனது பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி இறைவனை பூஜித்து வந்தான். ஒரு பங்குனி மாத பௌர்ணமியில் இறைவன் சந்திரனுக்கு காட்சி கொடுத்து சாபத்தை நீக்கினார். இத்தல இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றதால் இத்தலம் சந்திரனுக்குரிய தலமாக விளங்குகிறது. சநதிரன் சாபம் நீங்கப் பெற்றது போல நாம் சென்று வழிபட்டால் நமது குறைகளும் நீங்கும் என்பது ஐதீகம்.
கோயில் அமைப்பு
கிழக்கு நோக்கியுள்ள கோயிலுக்கு தெற்கில் அமைந்துள்ள வாயிலே பிரதான வாயிலாக அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் இறைவன் கைலாசநாதர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்பாள் பெரியநாயகி சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலுக்கு முன்பாக சந்திர தீர்த்தம் உள்ளது. கோவிலின் வெளிப்பிரகாரத்தில் விஷம் தீர்த்த விநாயகர், சுப்பிரமணியர், கோஷ்டத்தில் அமர்ந்த நிலையில் தட்சிணாமூர்த்தி, கஜலெட்சுமி சந்நிதிகளும், சண்டிகேஸ்வரர் உடன் சண்டிகேஸ்வரி சந்நிதியும், பைரவர் சந்தியும் அமைந்துள்ளன. இத்தலத்தில் ஷேத்திர பாலகனான சந்திரன், மேற்கு திசை நோக்கி இறைவனைப் பார்த்தபடி தனி சந்நிதியில் காட்சியளிக்கிறார்.
இத்தலத்தின் சிறப்பு
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தில் சந்திர பகவானின் ஒளி மூலவர் கைலாசநாதர் திருமேனியில் விழுவதை இன்றும் இத்தலத்தில் காணலாம். பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தில், கைலாசநாதர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து தனி சந்நிதியில் அமர்ந்திருக்கும் சந்திர பகவானுக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
தோஷங்கள் நீக்கும் தலம்
அருள்மிகு கைலாசநாதர் கோயிலில் அமைந்துள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, இறைவன் மற்றும் தனி சந்நிதியில் காட்சி தரும் சந்திரனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து, நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் யாவும் நீங்கி நற்பலன்கள் உண்டாகும். இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று காலை உதயத்தில் 6 மணிக்கு லிங்கத்தின் மீது சூரிய ஒளி படுவதால், அன்று சூரிய பூஜையும், மறுநாள் பௌர்ணமி பிரதமையில் மாலை 6 மணிக்கு சந்திர ஒளி லிங்கத்தின் மீது படுவதால் அன்று சந்திர பூஜையும் நடைபெறுவது வழக்கம்.
அன்னப்பிரசானம்
திருநாவுக்கரசரும், அப்பரும் தங்கள் பதிகங்களில் திங்களூர் தலத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகள் அவதரித்த தலம் என்ற பெருமையும் திங்களூருக்கு உண்டு
குழந்தைக்கு முதல் சோறு ஊட்டுவதை அன்னப்பிரசானம் என்பர். கிராமங்களில் உள்ள மக்கள் தங்களது குலதெய்வக் கோயில்கள் இந்த சடங்கைச் செய்வார்கள். வசதியுள்ளோர் குருவாயூரப்பன் கோயிலில் செய்வது வழக்கம். தமிழகத்தில் அன்னப்பிரசானத்துக்கு மிகச்சிறந்த தலமாக திங்களூர் கைலாசநாதர் கோயில் விளங்குகிறது.
அசுவினி, மிருகசீரிஷம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி நட்சத்திர நாளிலும், சந்திரஹோரை வேளையிலும் சந்திரனையும், பசுவையும் குழந்தைக்கு காண்பித்து, வெள்ளிக்கிண்ணத்தில் பால், நெய், தேன் கலந்த சாதத்தை ஊட்ட வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு ஜல தேவதையின் அருளும், ஔஷதி தேவதையின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஜலதேவதையின் அருளால் குழந்தைக்கு ஜலதோஷம், காய்ச்சல், உள்ளிட்ட நோய் அண்டாது என்றும், அப்படியே வந்தாலும் ஔஷதி (மருந்து) தேவதையின் அருளால் அது உடனே நீங்கிவிடும் என்பதும் இத்தலத்து விசேஷமாக கூறப்படுகிறது.

Comments
Post a Comment